Thursday, 6 May 2010

என்னை உனக்குள் வைத்துகொள்கிறாய்!!!!!!

ஞாயிறு காலையில்

நான் சுடும் ஒவ்வொரு தோசைக்கும்

ஒரு முத்தம் என

மூன்று முத்தம் மட்டும் தரும்

கொடுமைகாரி நீ.

——-0O0———-

எப்போதோ நீ எழுதிய

என் பேனாவில்

பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்

உன் வாசனையை

——-0O0———-

எதற்கு பார்த்தாய் என்கிறாய்

சும்மாதான் என்கிறேன்

என்னை சும்மா சும்மா பாத்திட்டே

இருக்க மாட்டயா டா

என காதல் பேசி

திரியும் இந்த அழகு

பிசாசை என்ன செய்வது?

——-0O0———-

மோகமுற்ற பொழுதுகளில்

குகுருப்பாய்

ஒரு பார்வை பார்த்து

மடியில் கிடத்தி

கொஞ்சுவாயே

அதில் சுருண்டு விழுந்து

மரித்து போனவன் நான்

——–0O0———-

எனக்கு இரண்டே ஆசை தான்

உன்னை காதலிப்பது

மற்றும்

உன்னை இன்னும்

அதிகதிமாய் காதலிப்பது

——-0O0———-

உன்னை வம்புக்கிழுத்து

கோபமுட்டி மன்னிப்பு

கேட்கும் இரவுகளில்

வழிந்த கண்ணீரை

துடைத்துக்கொண்டு

இறுக்கி அணைப்பாயே

அதில் உடைந்து போனவன் நான்

——-0O0———-

காலை முதல்

பேசாமல் சண்டைபிடித்து

சாயந்திரம் வீடு திரும்பி

போன் போட்டு

சும்மானாச்சுக்கும் கால் பண்ண

என்று சொல்லும் போதே

கொட்டி விடுகிறது

உன் காதலெல்லாம்

——-0O0———-

சிரித்துக்கொண்டே சிறைபிடிக்கும்

சிறகற்ற யட்சி நீ

தவித்துக்கொண்டே சிறைபடும்

வீழ்த்தப்பட்ட யட்சன் நான்

——-0O0———-

இரவில் இறுக்கி முடிய விழிகளுக்குள்

புகுந்து நர்த்தனம் ஆடிவிட்டு

ஒன்னும் தெரியாத மாதிரி

சாலையில் என்னை கடந்து

செல்கிறாய்

——-0O0———-

நீ காட்டும் உதட்டுச்சுழிப்பில்

கவிதை பொறுக்கிக்கொண்டிருக்கும்

எத்தன் நான்

——-0O0———-

என்னை உன கூடவே வெச்சுக்க்கோடா

என சொல்லும் ஒவ்வொரு கணமும்

என்னை உனக்குள் வைத்துகொள்கிறாய்

No comments:

Post a Comment