Wednesday, 4 November 2009

இரண்டாம் கருவறை...






வார்த்தைகளால் விவரிக்க முடியாத உனதன்பில் திளைத்திருக்கிறது என் மனச்செடி. போர் தொடுக்கும் என் சுடுசொற்களையும்
சிறு மெளனத்தால் அழகாய் கடந்துவிடும் உனது லாவகம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். வர்ணங்கள் நிறைந்த மழையை என்னில்
எப்போதும் பொழிந்துபோகும் வெண்மேகம் நீ.

கரம் பற்றிக்கொண்டு கால்கள் மணலில் புதைய கடற்கரையில் என்னோடு நீ நடந்து வருகையில் நினைவுகளில் முகிழ்கிறதென்
கால்சட்டை பருவ நாட்கள். நீண்டதொரு ரயில் பயணத்தில் என் தோள் சாய்ந்துகொண்டு ஜன்னல்வழியே தூரப்பச்சையை ரசித்த
உனது கருவிழிக்குள்தான் நான் துயிலும் இரண்டாம் கருவறை இருக்கிறது.

முத்தங்களால் என் கன்னம் நனைக்கும் உன் எச்சில்கள் - அமுதசுரப்பிகள். சத்தமின்றி எனக்குள் யுத்தமொன்று உருவாகி அடங்கிப்போய்விடும்
உன் கோபத்தருணங்களில். சூழ்நிலை சிறைக்குள் நான் தவிக்கின்றபோதெல்லாம் உன் சாந்தப்பார்வையின் ஞாபகநிலவுகள் என்னில் பொழிந்து என்னை உயிர்ப்போடு வைத்திருக்கும்.

என் நண்பர்கள் வியந்துபோகிறார்கள் எப்படி உனக்கு மட்டும் இரட்டை நிழலென்று. என் ஒற்றை உடலுக்குள்ளிருப்பது இரண்டு உயிர்கள் என்பதை எப்போது உணர்வார்கள்? நமக்கு மட்டுமே தெரிகின்ற சங்கேத வார்த்தையை நான் உச்சரிக்கும் போதெல்லாம் வெட்கத்தில் உன் முகத்தில் விதவிதமாய் பூக்கள் மலரும்.

நிறைந்த ப்ரியங்களுடன் உனக்கென நானெழுதும் கடிதங்களெல்லாம் கவிதைகளாகி விடுகின்றன. கவிதைகளெல்லாம் காதலாக மலர்கின்றன.
உன் உதட்டுச்சுழிப்பிலும் ஒற்றை மருவிலும் கால்சுற்றும் நாய்க்குட்டியாகி போனது என் ஆண்மை.

இவைபோன்ற கனவுகள் எப்போதும் அழகாய்த்தானிருக்கின்றன.

No comments:

Post a Comment